Monday, January 16, 2012

மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த கட்டுரையில் இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் வாசகமாகிய 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம், என்ற வாசகத்தை மொழிந்து விட்டு அதற்கடுத்து எதிராளியை மன்னித்து விடுவோம் என்ற நல்லமுடிவை மேற்கொண்டு விட்டு இறுதியாக அவருக்கு ஸலாம் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும் என்ற மூன்று உயர் பண்புகளை பின் பற்றினால் அவரிடமிருந்தும் அவருடைய மேற்காணும் நற்செயல்கள் மூலம் எதிராளியிடமிருந்தும் கோபம் முற்றாக விலகி விடுவதுடன் ஷைத்தானின் தீய சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு விடும் என்பதைப்  பார்த்தோம்.

அடக்கி ஆளும் ஆற்றல்
அனைத்து விஷயங்களிலும் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளக் காரணத்தால் தான் எது சரி, எது தவறு என்பதை பிரித்து அறிந்து சூழ்நிலைக்கொப்ப காரியங்களின் வீரியங்களுக்கு ஏற்றவாறு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு உணர்வுகளை அடக்கி ஆள்வதற்காக அருள்மறைக் குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான்.
அருள்மறைக் குர்ஆனின் நற்செய்திகளை வாங்கி நமக்கு வழங்கிய அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதில் சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தங்களுடை வாழ்வை அமைத்துக்  கொண்டு நமக்கும் ஏவினார்கள்.

அண்ணல் அவர்களும், அருள்மறையும் நம்மிடம் வருவதற்கு முன் மனித சமுதாயத்தில் நடந்தவைகளில் தீய காரியங்களை பட்டியலிட்டு அவற்றை அறியாமை காலப் பழக்க வழக்கங்கள் என்று கூறி அவைகள் அனைத்தையும் காலில் இட்டு மிதிப்பதாகக் கூறி அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.  

அவற்றில் ஒன்று தான் கோபம் ஏற்பட்டு இரு தரப்பார் சச்சரவில் ஈடுபடும்பொழுது காட்டுக் கூச்சல் இடுவதாகும். ( இதை இதற்கு முந்தைய நான்காவது தொடரில் சுட்டிக்காட்டினோம் அதன் சுருக்கம்.) ...'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே ஏன்?' என்று கேட்டு விட்டு 'அவ்விருவரின் விவகாரம் என்ன?' என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது'' என்று கூறினார்கள்... புகாரி 3518. ஜாபிர்(ரலி) கூறினார்.

குரல் வளையிலிருந்து அதிகமான சப்தம் வெளிப்படுவதையே இஸ்லாம் தடுத்திருக்கிறது அதை அஞ்ஞானப் பழக்கம் என்று இடித்துரைக்கிறதென்றால் கோபத்தின் வாயிலாக கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதையும் ஒருவருக்கொருவர் காறி உமிழ்ந்து கொள்வதையும் சட்டையைப் பிடித்துக் கொண்டு மல்லுக்கு நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்குமா ? சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். இதனால் தான் கோபத்தை மென்று விழுங்கி விடுங்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறினான்.

அருள்மறைக் குர்ஆனின் அழகிய உபதேசங்களைப் பின்பற்றி அருள்மறைக் குர்ஆனாகவே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அண்ணல் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களிடத்தில் ஒருவர் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டபொழுது கோபத்தை கட்டுப்படுத்திக்கொள் என்று மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக வலியுருத்திக் கூறிய  சம்பவமும் உண்டு.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்று உபதேசம் செய்ய அவர் பல முறை வேண்டிய போதும் நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்றே கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா –ரலி, நூல் : புகாரீ 5651

மன்னிக்க மாட்டார்களா எனும் சிந்தனை மேலானது.
சச்சரவுகளை இருவகையாகப் பிரிக்கலாம் வெளியில் நன்பர்களுக்கு மத்தியில் அல்லது கடைகளில் பொருள் வாங்கும் பொழுது அல்லது பயணிக்கும் பொழுது இன்னும் வேறு சூழலில் ஏற்படுகின்ற சச்சரவுகளின் போது மன்னித்து விடுவோம் என்ற நிலையை மேற் கொள்ளலாம். 

இதே தாய் தந்தை, மூத்த சகோதர, சகோதரி, மூத்த வயதையுடைய தூரத்து உறவினர்கள், மார்க்க அறிஞர்கள் நம்மிடம் கோபம் கொண்டால் அல்லது கோபம் எற்படுவது போன்று நடந்து கொண்டால் அவர்களின் விஷயத்தில் மன்னித்து விட்டேன் என்ற எண்ணம் நமக்கு வரக் கூடாது அவர்களை நாம் மன்னிக்க முடியாது அவர்களே நம்மை மன்னிக்கத் தகுதியானவர்கள்.

இது போன்றத் தருணங்களில் நாமே நம்மை கட்டுப் படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் கோபத்தை மென்று விழுங்குவதுடன் இச்சம்பவத்திற்காக அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்களா ? இப்பிரச்சனை முடிந்து விடாதா ? என்ற எண்ணமே உதயமாக வேண்டும் இந்த நற்சிந்தனையே முன்னதை விட உயர்வானதாகும் அத்துடன் அங்கிருந்து இடம் பெயர்ந்து தனி இடத்தில் போய் சற்று அமர்ந்து விட வேண்டும். 

கோபம் ஏற்பட்டவர்கள் கடை பிடிக்க வேண்டிய அறிய தகவல்.
ஒருவருக்கு அதிகமாக கோபம் வந்தால் அந்த கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து உடல் நலத்தையும், மறுமை வாழ்வையும் காக்கக் கூடிய அழகிய ஆலோசனையையும் அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தை ஏந்தி வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லித் தந்துள்ளார்கள்.

நின்று கொன்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும், உட்கார்ந்தப் பின்பும் கோபம் தணிய வில்லை என்றால் சிறிது நேரம் படுத்துக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்கள் : அஹ்மத், திர்மிதி

கோபம் வந்து விட்டால் அது விடைபெறும் பொழுது பாரிய விளைவுகளை உண்டு பண்ணி விடும் என்பதால் தான் தொடர்ந்து அண்ணல் அவர்கள் பல உபதேசங்களை கூறி அவற்றை வரிசையாக பின் பற்றும்படி வலியுருத்திக் கூறினார்கள். 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு ஒரு செய்தியை சொல்லி விட்டால் கண்டிப்பாக அதில் நன்மை இருக்கும் என்பதை அறிந்து வைத்திருந்த அவர்களின் ஆருயிர் தோழர்கள் அதை சிறிதளவும் மாற்றமில்லாமல் பின்பற்றி வந்தார்கள். அவர்களின் கூற்று நடைமுறைக்கேற்றது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் அதனடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இம்மை, மறுமை நற்பேருகளை தேடிக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.

வரலாற்றில் ஒர் நாள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய செய்தி அறிந்து அங்குக் குழுமி இருந்த மக்களிடம் அண்ணல் அவர்கள் இறக்க வில்லை என்றும் இறந்து விட்டதாகக் கூறியவர்களிடம் கடும் கோபம் கொண்டும் பேசிக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறிய முதல் வார்த்தை நீங்கள் முதலில் உட்காருங்கள் என்பது தான் அதற்கு அவர்கள் மறுக்கவே மீண்டும், மீண்டும் உட்காருங்கள் என்றுக் கூறி விட்டே அண்ணல் அவர்கள் இறந்து விட்டார்களா ? இல்லையா ? என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்களை தெளிவுப் படுத்தினார்கள் இதில் கடும் கோபத்தில் இருந்த உமர் (ரலி) அவர்களும் தெளிவு பெற்றார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூபக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்'' (திருக்குர்ஆன் 3:144) என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூபக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறிய உபதேசத்தை உள்ளத்தில் ஏற்றி வைத்திருந்த அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடாமல் அண்ணல் அவர்களின் உபதேசததைக் கூறி அமரச் சொல்லி விட்டு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறி உமர்(ரலி) அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு சிந்திக்கத் தூண்டினார்கள். 

அன்று அவர்களை விட்டு ஓடிய ஷைத்தான் மீண்டும் அங்கே வந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு பல ஆண்டுகள் பிடித்தன என்றால் மிகையாகாது. 

இன்று நாம் தான் அண்ணல் அவர்களின் அறிவுரைகளை உபதேசங்களை பின்பற்றுவதில்லை அதனால் தான் இணைவைத்தல், விபச்சாரம், வட்டி போன்ற பெரும் பாவங்களில் வீழாதவர்களையும் கோபத்தை உண்டு பண்ணி பாவத்தை ஏற்படுத்தி விடுகின்றான் ஷைத்தான்.

கோபம் எற்பட்டதும் இரத்த ஓட்டம் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது என்பதால் இரத்த ஓட்டம் கட்டுக்குள் வரும் வரை அமர்ந்து விடுவது அல்லது படுத்து விடுவது சிறந்தது என்பதை 1400 வருடங்களுக்கு முன் அழகிய உபதேசமாக நம்மிடம் கூறினார்கள் அண்ணல் அவர்கள்.

இன்று நாம் பார்க்கின்றோம் இரத்த அழுத்தத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை அணுகினால் இரத்தத்தை சீராக இயங்கச் செய்வதற்கான சிகிச்சை (இஞ்செக்ஷன் அல்லது மாத்திரைகள்) கொடுக்கப்பட்டால் இரத்தம் சீராக இயங்கும் வரை சிறிது நேரம் படுக்கச்செய்து விடுகின்றனர் மருத்துவர்கள். 

அல்லாஹ்வின் கட்டளைகளையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆலோசனைகளையும் வரிசையாக செயல் படுத்தி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து பாரிய விளைவுகளைத் தடுத்து பாவங்களிலிருந்து விலகிக் கொள்ளும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

No comments:

Post a Comment