Saturday, January 5, 2013

‘பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?



- கான் பாகவி
முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவது, திருமணநாள் கொண்டாடுவது, நினைவுநாள் அனுசரிப்பது, முஹர்ரம் மாதத்தில் தீ மிதிப்பது, பஞ்சா எடுப்பது, இறைச்சி கூடாது என நம்புவது, தர்ஹாக்களில் சந்தனக்கூடு தூக்குவது, சமாதிகளைச் சுற்றிவருவது, அங்கு குழந்தைகளை உருட்டிவிடுவது, சமாதிகளுக்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வது, குழந்தைவரம் கேட்பது, திருமண வரன் கேட்பது, குழந்தைகளின் பிறந்தமுடி எடுத்து காணிக்கை செலுத்துவது, ஷைகுகள் மற்றும் பெரியவர்களின் கால்களைத் தொட்டு, அல்லது கால்களில் விழுந்து ஆசி கேட்பது, சிலவேளைகளில் அவர்களையே வணங்குவது, பெண்கள் ஷைகுகளின் கரம் பற்றி நல்லாசி பெறுவது, கத்னா (சுன்னத்) ஊர்வலம் நடத்துவது, திருமணத்தில் பந்தல்கால் நடும் வைபவம், காதுகுத்து விழா, மஞ்சள் நீராட்டு விழா, இறந்தவர்கள் பெயராலும் திருமணத்தை முன்னிட்டும் நடத்தப்படும் சில சடங்குகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் என்ன? இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் நபிவழிகளா? குறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமா? அப்படி கிட்டும் என்றால், இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களா? இல்லையா?
இதுபோன்ற கூத்துகளுக்கு மார்க்கத்தில் ஏதேனும் முன்மாதிரி இருக்க வேண்டுமா? இல்லையா? இவற்றைச் சொந்த விருப்பத்திற்காக -வாழையடி வாழையான ஒரு சம்பிரதாயத்திற்காக- பெண்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காகச் செய்கிறோம்; மார்க்கத்தின் பெயரால் அல்ல என்கிறீர்களா?
இந்தச் சடங்குகளால் நன்மை கிடைக்கும்; அல்லது ஆபத்து அகலும் என்று நம்புகிறீர்களா? இல்லையா? இந்த நம்பிக்கை, உங்களது ஏகஇறை நம்பிக்கைக்கு, இறைத்தூதர்மீது கொண்ட நம்பிக்கைக்கு, குர்ஆன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரண்படுகிறதே! என்ன செய்வீர்கள்? அந்த நம்பிக்கையே இல்லை என்றாலும், சடங்குகளுக்காகச் செலவழிக்கப்படும் பணம், நேரம், உழைப்பு எல்லாம் வீண்தானே! இதற்கு மறுமையில் என்ன பதில் சொல்வீர்கள்?
ஆக, மார்க்கம் சொல்லாத, அல்லது மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால், அல்லது நன்மையைக் கருதி உருவாக்குவதும் அதைக் கடைப்பிடிப்பதும்தான் பித்அத்’ (அநாசாரம்) எனப்படுகிறது.
பித்அத் என்றால் என்ன?
பித்அத்எனும் அரபிச் சொல்லுக்கு, ‘முன்மாதிரியின்றி ஆரம்பிக்கப்பட்ட செயல்என்பது சொற்பொருளாகும். இஸ்லாமிய வழக்கில், மார்க்க ஆதாரமோ அடிப்படையோ இல்லாத செயலுக்கு பித்அத்என்பர். வணக்கவழிபாடுகள், மார்க்க அடையாளங்கள், மார்க்க விதிமுறைகள் ஆகியவற்றில் மக்களாக உருவாக்கும் நடைமுறைதான் பித்அத் எனப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள், சமாதிகளில் நடக்கும் அநாசாரங்கள், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழுகைகள் மற்றும் நோன்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும். (புகாரீ)
மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது: உரைகளில் சிறந்தது இறைமறை; நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை; செயல்களிலேயே தீயது புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்; தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம், நஸயீ)
ஆக, ‘பித்அத்எனும் சொல்லுக்கு அநாசாரம், குருட்டு நம்பிக்கை, நவீன சித்தாந்தம் என்றெல்லாம் பொருள் செய்யலாம். இது எவ்வளவு பெரிய கேடானது என்பதற்கு நபிமொழிகளும் சான்றோரின் சொற்களும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பித்அத்வாதியிடமிருந்தும் பாவமன்னிப்பை (தவ்பா) தடுத்துவிடுகிறான். (தப்ரானீ, ஷுஅபுல் ஈமான்)
ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு கூட்டம் தம் மார்க்க விஷயங்களில் அநாசாரம் ஒன்றை உருவாக்கினால், அதன் இடத்தை வகிக்கும் நபிவழியான சுன்னத்தை அல்லாஹ் அகற்றாமல் இருப்பதில்லை. பிறகு மறுமை நாள்வரை அந்த நபிவழி அவர்களிடம் திரும்பிவருவதே இல்லை. (தாரிமீ)
கப்றுகளில் சஜ்தா
அநாசாரங்களிலேயே மிகவும் கேடானது அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கு -மனிதருக்கோ சின்னத்திற்கோ கட்டடத்திற்கோ- சஜ்தாஎனும் சிரவணக்கம் செய்வதுதான்.
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: அல்லாஹ்வுக்கே சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்; (அவனையே) வழிபடுங்கள். (53:62)
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (இராக்கிலுள்ள) அல்ஹீராஎனும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள், தங்களிடையே இருந்த ஒரு மாவீரனுக்கு சஜ்தா செய்வதைக் கண்டேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்யப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்’’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன்.
நான் மதீனா திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அந்த ஊரில் கண்டதைச் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சஜ்தா செய்வதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்களாயிற்றே?’’ என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் இறந்து அடக்கம் செய்யப்பட்டபின்) என் அடக்கத்தலம் அருகில் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதற்கு நீங்கள் சஜ்தா செய்துவிடுவீர்களா?’’ என்று வினவினார்கள். நான் இல்லைஎன்றேன்.
அப்போது நபியவர்கள், ‘‘அப்படிச் செய்துவிடாதீர்கள். (அதாவது நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்தபிறகும் எனக்கு சஜ்தா செய்ய வேண்டாம்.) ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவனுக்கு அதைச் செய்யுமாறு மனைவிக்கு உத்தரவிட்டிருப்பேன். பெண்கள் தம் கணவன்மார்களுக்கு அந்த அளவுக்குக் கடமைப்பட்டுள்ளார்கள்’’ என்று விளக்கினார்கள். (அபூதாவூத், ஹாகிம், தாரிமீ, தாரகுத்னீ, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சஜ்தா செய்த ஒட்டகம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதுதான் அவர்களின் தோட்டத்தில் நீர் இறைக்கும். ஒரு தடவை அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது. நீர் இறைக்க மறுத்தது.
அந்த அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் எழுந்திருங்கள்என்று சொல்லிவிட்டு, தோட்டம் வந்துசேர்ந்தார்கள். ஒட்டகம் ஓர் ஓரத்தில் நின்றிருக்க, அதை நோக்கி நபியவர்கள் நடந்தார்கள். தோட்ட உரிமையாளர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயாக மாறியிருக்கிறது. உங்கள்மீது பாய்ந்துவிடும் எனப் பயப்படுகிறோம்’’ என்று தடுத்தார்கள்.
ஆனால் நபியவர்கள், அதனால் எனக்கு எந்தத் தீங்கும் நேராது என்று சொல்லிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒட்டகம் கூர்ந்து பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி நேராக வந்து, அவர்களுக்கு முன்னால் அப்படியே சரிந்து சஜ்தா செய்தது. பின்னர் அதன் நெற்றியில் வருடிக்கொடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அது அடங்கிவிட்டது. தன் பணியைத் தொடங்கியது.
இக்காட்சியைக் கண்ட தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ இந்த அறிவற்ற விலங்கு உங்களுக்கு சஜ்தா செய்கிறது. நாங்கள் ஆறறிவு உள்ளவர்கள். உங்களுக்கு சஜ்தா செய்ய நாங்களே பொருத்தமானவர்கள்’’ என்றார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள்: எந்த மனிதரும் எந்த மனிதருக்கும் சஜ்தா செய்வது தகாது. அப்படித் தகும் என்றிருந்தால், பெண் தன் கணவனுக்கு சஜ்தா செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருப்பேன். அவனுக்கு அவள் அந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! கணவனின் பாதத்திலிருந்து தலைவரை கொப்புளம் இருந்து, அதில் சீழும் சலமும் வடிந்துகொண்டிருக்க, மனைவி வந்து அதைத் தன் நாக்கால் சுத்தம் செய்தாலும், கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை தீராது. (முஸ்னது அஹ்மத்)
என்ன செய்ய வேண்டும்?
அநாசாரங்களைத் தடுப்பதும், அநாசாரங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதும் கற்றறிந்தவர்களின் தலையாய கடமையாகும். அதை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற குருட்டு நம்பிக்கைகளுக்கும் தவறான செயல்முறைகளுக்கும் பரிந்துபேசுவதும் வக்காலத்து வாங்குவதும் கடுமையான குற்றமாகும்; பெரும்பாவமாகும். கற்றவர்கள் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது சாமானியர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துவிடும்; அவர்கள் அநாசாரங்களிலிருந்து மீள வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
ஒரு செயல் சரியா, தவறா என்ற சர்ச்சை எழுந்துவிட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன? இதோ அல்லாஹ்வே கூறுகின்றான்:
ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புகிறவர்களாயின், அதை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் விட்டுவிடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (4:59)
அதாவது இறைமறையிடமும் இறைத்தூதரின் வழியிடமும் விட்டுவிட வேண்டும். அல்லாஹ்வோ அவன் தூதரோ என்ன சொல்கிறார்களோ அதையே தீர்வாக ஏற்க வேண்டும்.
மற்றொரு வசனம், ‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டாலும் அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது’’ (42:10) என்று கூறுகின்றது.
இவ்வாறிருக்க, இறைவசனத்திற்கும் நபிமொழிகளுக்கும் மனவிருப்பத்திற்கேற்ப விளக்கமளிப்பதும், அவற்றை வளைத்து ஒடிப்பதும் எவ்வாறு தகும்?
இது பயங்கரவாதமா?
தாருல் உலூம் தேவ்பந்த் அரபிக் கல்லூரி
எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்றால், குருட்டு நம்பிக்கைகளையும் அநாசாரங்களையும் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் பயங்கரவாதிகள்என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதுதான்.
இதற்கு இவர்கள் கையாளும் தந்திரம் என்னவென்றால், அநாசாரங்களைச் சாடுபவர்கள் வஹ்ஹாபிகள்; வஹ்ஹாபிகள் பயங்கரவாதிகள் என்ற சொத்தை வாதம்தான். அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் வஹ்ஹாபிகள் என்பது பொய்; வஹ்ஹாபிகள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்பதும் பொய்.
கடந்த மாதம் உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டின் பெயர்: சூஃபி மகா பஞ்சாயத்துக் கூட்டம். முக்கியப் பேச்சாளர்: மஷாயிக் வாரியத்தின் தலைவர். அவர் பேசியதுடன் மாநாட்டின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்ட சில வரிகள்:
  • தேவ்பந்த் மதரசா, ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு, வஹ்ஹாபிஸம் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள்.
  • இவர்களின் பிடியில் சிக்கியுள்ள பள்ளிவாசல்களையும் மதராசக்களையும் கைப்பற்ற வேண்டும்.
  • வக்ஃப் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.
  • காங்கிரஸ் கட்சியை நம்பக் கூடாது; தோற்கடிக்க வேண்டும். இதற்காக மஷாயிக் வாரியம் அரசியலில் குதிக்க வேண்டும்.

அகில இந்திய மஷாயிக் வாரியம், பத்திரிகையாளர் சந்திப்பு
இந்தக் கூட்டத்தின் கோஷங்களும் தீர்மானங்களும் இந்துத்துவா சக்திகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாகும். இவ்வாறு ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, ஒருவர்மீது ஒருவர் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தால், இரு பக்கமும் அழியப்போவது கலிமாசொன்ன முஸ்லிம்கள்தான்.
இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை? அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் அல்லவா? மூடநம்பிக்கை, சமூகத்தீமை ஆகியவற்றைக் களைய பாடுபடுவோர் நாலு பேர் இருப்பதால்தான், சமுதாயம் சிறிதளவாவது மார்க்க வழியிலும் பகுத்தறிவு பாதையிலும் நடைபோட முடிகிறது.
உங்களுக்கு அநாசாரங்கள் பிடிக்கும் என்றால், அறிவால், வாதத்திறமையால், உண்மையால், ஆதாரங்களால் நிரூபியுங்கள். அது முடியவில்லை என்பதற்காக பயங்கரவாத முத்திரை குத்துவதும் அபாண்டங்களைச் சுமத்துவதும்தான் நாகரிகமாக? அல்லது நீங்கள் சொல்லும் ஆன்மிகமா?
வெளியேற்றாதீர்கள்!
அதே நேரத்தில், பித்அத்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நிதானமிழந்து செயல்படுவோர் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பித்அத்களை எதிர்க்கும் சாக்கில் சமுதாயத்தில் பிளவை உண்டாக்குவதையும் முஸ்லிம்களையே இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவதையும் இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
ஈமான்என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். பித்அத் செய்யும் ஒருவர், ஓரிறைக்கொள்கை, இணை கற்பிக்காமை, முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதான நம்பிக்கை முதலான அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால், அவரை எப்படி இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியும்? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். (புகாரீ)
அதாவது காஃபிர் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே அவர் தகுதிபெற்றவராக இல்லை என்றால், அச்சொல் சொன்னவரையே திருப்பித் தாக்கும்.
எனவே, பரப்புரை (தஃவா) வெறுப்பேற்றக்கூடியதாக இருக்கலாகாது; சிந்திக்கத் தூண்டக்கூடிய வகையில் நளினமானதாகப் பிரசாரம் அமையம் வேண்டும். புரிந்துகொள்வார்களா...?

திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி - ஒரு வரலாற்றுப் பார்வை!

முன்னுரை

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்.

அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன.

பொதுவான தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும் இடையிலான வேறுபாடே, இஸ்லாமிய வேலியைத் தாண்டாமலும், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் மற்ற மொழிகளுக்குச் சற்றும் சளைக்காமலும் தொண்டாற்றுவது தான். இதுவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் கொடையாகும்.

ஒரு சமூகத்தின் நம்பிக்கையை, கலாசாரத்தை, அதன் வழிபாட்டு முறையை, வாழ்க்கைச் சக்கரத்தை கலை நயத்தோடு வெளிப்படுத்துவதே இலக்கியம் ஆகும். 

இஸ்லாமிய இலக்கியம் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

இதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், சமூக, பொருளாதார, குடும்ப, தனிமனித ஒழுக்கங்கள் தான் வழிகாட்ட முடியும். இவற்றைத் தாய்மொழியில் அறிந்து அசைபோட இஸ்லாமிய மூலாதார நூல்களே துணை நிற்கும்.

இந்த வகையில், அரபி மொழியில் உள்ள திருக்குர்ஆன், நபிமொழி, சட்டம், வரலாறு உள்ளிட்ட அடிப்படை நூல்கள் தமிழில் இருந்தால்தான், அரபி மொழி அறியாத தமிழ் அறிஞர்கள் அவற்றை அறிந்து, இலக்கியப் படைப்புகளில் கையாள முடியும். தவிரவும், பொதுமக்களும் படித்துணர்ந்து பின்பற்றி வாழ முடியும்.

திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகிய மூலாதார நூல்கள் அரபியிலிருந்து உர்து, ஆங்கிலம், பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நீண்ட நெடுங்காலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் திருக்குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.

அதையடுத்து திருக்குர்ஆன் விரிவுரை, நபிமொழி, சட்ட நூல், வரலாறு ஆகிய மூலாதார நூல்கள் படிப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. இன்னும் நிறைய வெளிவர வேண்டியிருக்கிறது.

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்

பெரும்பாலான உலக மொழிகளில் உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் சிரியாக் (சுர்யானீ) மொழியில்தான் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கி.பி. ஏழாம் நூற் றாண்டின் துவக்கத்தில்) முஸ்லிமல்லாத ஒருவரால் சிரியாக் மொழியில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டது. அடுத்து பெர்பரீஸ் மொழியிலும், அதை யடுத்து பாரசீக மொழியிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்திய மொழிகளில் உருது, ஹிந்தி, குஜராத்தி, சிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், மலை யாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி

தமிழில் முதன் முறையாகத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நாடறிந்த மார்க்க மேதை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.

1876ஆம் ஆண்டு பிறந்த மௌலானா அவர்கள், 1906ல் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்றார். பாக்கியாத் நிறுவனர் அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்களது காலத்தில் அங்கு சேர்ந்த மாணவர்களில் முதல் அணியில் மௌலானா அவர்களும் ஒருவர் என்பது சிறப்புக் குரியது.

1929ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான அல்பகராஅத்தியாயத்திற்கு மட்டும் விரிவுரையுடன் மொழிபெயர்ப்பு வெளியிட்டார்கள். பின்னர் முழுக் குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிட எண்ணி, வேலூர் பாக்கியாத்தில் நான்கு மாதங்கள் தங்கி, அங்குள்ள பெரிய மார்க்க அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று தர்ஜுமத்துல் குர்ஆன் பி அல்த்தஃபில் பயான்என்ற பெயரில் 1943ஆம் ஆண்டு முழுமையான மொழிபெயர்ப்பு வெளி யிட்டார்கள்.

திருமக்காவில் உள்ள ராபித்தத்துல் ஆலமில் இஸ்லாமீஎனும் உலக முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்று, சஊதி அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட சிறப்பு இந்த மொழிபெயர்ப் புக்கு உண்டு. இந்த முதலாவது மொழிபெயர்ப்பு இதுவரை சுமார் 25 பதிப்புகளில் வெளிவந்திருப்பது குறிப்பிடத் தக்கது. அன்று இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு என்ற சிறப்பு இதற்கு உண்டு.

2. ஜான் டிரஸ்ட்

அடுத்து சென்னை டாக்டர் எஸ். முஹம்மத் ஜான் அவர்களால் 1983ல் குர்ஆன் மஜீத்எனும் பெயரில் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. பின்னர் டாக்டர் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஜான் டிரஸ்ட் இந்த மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.

ஆங்கிலத்தில் வெளிவந்த யூசுப் அலீ அவர்களின் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, கம்பம் மௌலவி, ஸதக்கத்துல்லாஹ் பாகவி, எம். அப்துல் வஹ்ஹாப் M.A. Bth ஆகியோரின் ஒத்துழைப் பால் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. இதுவரை இது 20 பதிப்புகளில் வெளிவந்துள்ளது.

3. அஹ்மதிய்யா மொழிபெயர்ப்பு

திருக்குர்ஆன் (அரபி மூலத்துடன் தமிழாக் கம்)என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு இங்கிலாந்து இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்என்ற நிறுவனத்தில் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வெளியானது.

இது அஹ்மதிய்யா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் எழுதிய தஃப்சீர் ஸஃகீர்எனும் உர்து விளக்கவுரையை அடிப்படையாகக் கொண்டு மௌலவி, முஹம்மத் அலி என்பவரால் எழுதப்பட்டது.

4. திரீயெம் பிரிண்டர்ஸ்

குர்ஆன் தர்ஜமாஎன்ற பெயரில் 1992ஆம் ஆண்டு திரீயெம் பிரிண்டர்ஸ் நிறுவனத்தாரால் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்று வெளியானது. மௌலானா, M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th மௌலானா, K.A. நிஜாமுத்தீன் மன்பஈ உள்ளிட்ட அறிஞர்களால் இந்த மொழி பெயர்ப்பு எழுதப்பட்டது. இது பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.

5. சஊதி மொழிபெயர்ப்பு

சஊதி அரபிய்யா அரசாங்கம் சார்பாக சங்கை மிக்க குர்ஆன்எனும் பெயரில் 1992ஆம் ஆண்டு ஒரு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இந்த மொழி பெயர்ப்புப் பணியை மௌலவி, ரி. முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் தலைமையில் இலங்கை மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று மேற்கொண்டது. இது ஓர் இலவச வெளியீடாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் [IFT]

மௌலானா, சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் உர்து மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் அமைப்பால் 1996ஆம் ஆண்டு திருக்குர்ஆன் (மூலம், தமிழாக்கம், விளக்கவுரை)என்ற பெயரில் அழகான தமிழில் திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியானது.

மௌலவி, குத்புத்தீன் அஹ்மத் பாகவி, S. அப்துர் ரஊஃப் பாகவி ஆகியோர் மொழி பெயர்க்க, மௌலவி, M.S. சையித் முஹம்மத் ஃபாஸில் பாகவி, மௌலவி, K.J. மஸ்தான் அலீ பாகவி ஆகியோரின் மேலாய்வில் இந்த மொழிபெயர்ப்பு வெளியானது. இது 15 பதிப்பு களில் வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

சரளமான நடை, நல்ல தமிழ், அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக் கும் முன்னுரை, அடிக்குடிப்பு விளக்கம் ஆகியவற்றால் இந்த மொழிபெயர்ப்புத் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

7. பஷாரத் பப்ளிஷர்ஸ்

சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தார் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தர்ஜமா அல்குர்ஆனில் கரீம்எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். இதை திண்டுக்கல் மௌலவி, அ. சிராஜுத்தீன் நூரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இதில் திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்ற பின்னணி நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும்.

8. மூன் பப்ளிகேஷன்ஸ்

2002 டிசம்பரில் சென்னை மூன் பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்தார், ‘திருக்குர்ஆன்எனும் பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிட்டனர். மௌலவி, பி. ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் எழுதியுள்ள இந்த மொழிபெயர்ப்பு 400 விளக்கக் குறிப்புகளுடன் அமைந்துள்ளது. ஏராளமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

இவையன்றி திருச்சியிலிருந்து பேராசிரியர், பா. தாவூத் ஷா அவர்கள் எழுதி வெளியிட்ட ஒரு தமிழ் பெயர்ப்பும்  வந்துள்ளது.

திருக்குர்ஆன் தமிழ் விரிவுரைகள்

திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புடன், வசனங்களுக்கான நீண்ட விளக்கவுரைகள் (தஃப்சீர்) அரபி மொழியில் ஏராளமாக உள்ளன. அவற்றில் தஃப்சீர் தபரீ, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் கபீர், தஃப்சீர் பஹ்ருல் முஹீத், தஃப்சீர் அல்ஜவாஹிர், தஃப்சீர் அல்மனார் ஆகியவை குறிப்பிடத் தக்கவை ஆகும். அரபியல்லாத பிற மொழிகளிலும் விரிவுரைகள் வெளிவந்துள்ளன.

தமிழில் திருக்குர்ஆன் விரிவுரைகள் சமீப காலத்தில் தான் வெளிவந்தன. உத்தமபாளையம் மௌலானா, எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்சீரில் குர்ஆனில் மஜீத்எனும் பெயரில் தமிழில் திருக்குர்ஆன் விரிவுரை ஒன்றை எழுதி வெளியிட்டார்கள்.

ரூஹுல் பயான்எனும் அரபி விரிவுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த விரிவுரை 1937ஆம் ஆண்டு தொடங்கி, 1961வரை 7 பாகங்களில் வெளிவந்தது.

அன்வாருல் குர்ஆன்

கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் நிறுவனத்தார் 1955ஆம் ஆண்டு முதல் அன்வாருல் குர்ஆன்எனும் தமிழ் விரிவுரையை வெளியிட்டார்கள். தென்காசி மௌலானா, இ.எம். அப்துர் ரஹ்மான் ஃபாஸில் பாகவி அவர்கள் எழுதிய இந்த விரிவுரை, குர்ஆனின் 30 பாகங்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளில் வெளிவந்து நிறைவடைந்தது.

தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்

வேலூர் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 1992ஆம் ஆண்டு முதல் தஃப்சீர் ஜவாஹிருல் குர்ஆன்எனும் பெயரில் திருக்குர்ஆன் விளக்கவுரை ஒன்றை தமிழில் வெளியிட்டுவருகிறது. பாக்கியாத் பேராசிரியர்களைக் கொண்ட குழுவினர் இந்த விரிவுரையை உருவாக்குவதில் ஈடுபட்டுவருகின்றனர்.

கைக்கு அடக்கமான வடிவில் இதுவரை 5 தொகுதிகள் வெளி வந்துள்ளன. கல்லூரி நிர்வாகம் இந்த விளக்கவுரையை முழுமையாக வெளியிடுவதில் தீவிர அக்கறை காட்டிவருகிறது.

தஃப்சீர் இப்னு கஸீர்


சிரியா நாட்டைச் சேர்ந்த இமாம் இஸ்மாயீல் பின் உமர் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 700-774; கி.பி. 1300-1372) அரபி மொழியில் எழுதிய முதல் தரமான திருக்குர்ஆன் விரிவுரையே தஃப்சீர் இப்னு கஸீர்என அறியப்படுகிறது. நான்கு பாகங்களில் வெளிவந்த இந்த விரிவுரையை பேராசிரியர் முஹம்மத் அலீ அஸ்ஸாபூனி அவர்கள் மூன்று பாகங்களில் சுருக்கித் தந்துள்ளார்.

இந்தச் சுருக்கப் பதிப்பைத் தமிழில் கொண்டு வரும் பெரு முயற்சியில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மொத்தம் எட்டு பாகங்களில் வெளியிடத் திட்டமிட்டு, முதலாவது பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துள்ளன.

வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் பல்லாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி தலைமையில் மார்க்க அறிஞர்கள் குழு ஒன்று இத்திருப்பணியை மேற்கொண்டுள்ளது.

நபிமொழித் தொகுப்புகள்

இஸ்லாத்தில் திருக்குர்ஆனுக்கு அடுத்த மூலாதாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கும் வாழ்வும் அடங்கிய ஹதீஸ் எனப்படும் நபிமொழிகள்தான். அரபி மொழியில் நூற்றுக்கணக்கான நபிமொழித் தொகுப்புகள் இருந்தும், தமிழில் அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீண்ட காலம் கழிந்து விட்டது. அண்மை காலமாகவே இதில் தமிழ் முஸ்லிம்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

1954ஆம் ஆண்டு உத்தமபாளையம் எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரீஎன்ற பெயரில் ஸஹீஹுல் புகாரீ நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பிரதியைத் தமிழில் வெளியிட்டார்கள். இது ஹுசைன் பின் முபாரக் அஸ்ஸுபைதீ (ரஹ்) அவர்கள் அரபி மூலத்தைச் சுருக்கி வெளியிட்ட பிரதியின் தமிழாக்கமாகும்.

இந்தத் தமிழாக்கம் மூன்று பாகங்களில் வெளிவந்தது. 1957ல் மூன்றாவது பாகம் வெளிவந்தது.

அடுத்து 1989ஆம் ஆண்டு ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பின் சுருக்கப் பதிப்பான முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்தமிழாக்கத்தை மௌலவி, முஹம்மத் இக்பால் மதனீ அவர்கள் எழுதி, துபை இஸ்லாமிய எழுச்சி மையம் [IAC] வெளியிட்டது.

இந்தச் சுருக்கப் பதிப்பின் அரபி மூலத்தைச் சுருக்கித் தந்தவர் ஹாஃபிள், அப்துல் அழீம் அல் முன்திரீ (ரஹ்) அவர்கள் ஆவார். இவர் ஹிஜ்ரீ 678ஆம் ஆண்டு (கி.பி. 1279) இதைத் தொகுத்து முடித்தார். பின்னர் நாஸிருத்தீன் அல்பானீ அவர்களின் விளக்கக் குறிப்புடன் வெளிவந்தது. இந்தத் தமிழாக்கம் நான்கு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டு, இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன.

அடுத்து 1964ஆம் ஆண்டு பிரபல தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தொண்டி எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள், ‘ஹதீஸ் - பெருமானாரின் பொன்மொழிப் பேழைஎனும் பெயரில் நபிமொழித் தொகுப்புகளின் திரட்டைத் தமிழில் தந்தார்கள். இது மூன்று பாகங்களில் வெளிவந்துள்ளது.

பிரபல நபிமொழித் தொகுப்புகளான ஸஹீஹுல் புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ உள்ளிட்ட நூல்களிலிருந்து திரட்டப்பட்ட ஹதீஸ்களின் தமிழாக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

புலூஃகுல் மராம்

ஹாஃபிள் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 773 - 852; கி.பி. 1371 - 1448) தொகுத்த புலூஃகுல் மராம்எனும் நபிமொழித் தொகுப்பு ஒன்று 1999ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை மௌலவி, அப்துல் காதிர் உமரீ அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்கள். சென்னை இஸ்லாமிய கல்வி வெளியீட்டு நிறுவனத்தார் இந்நூலை வெளியிட்டுள்ளனர். இது ஒரே பாகத்தில் வெளிவந்துள்ளது.

இவையன்றி, உத்தமபாளையம் மௌலானா, றி.ஷி.ரி. முஹம்மது இப்ராஹீம் பாகவி அவர்கள் ஷமாயிலுத் திர்மிதீயைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட் டார்கள். அவ்வாறே இமாம் யஹ்யா பின் ஷரஃப் அந்நவவீ (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரீ 676; கி.பி. 1277) அரபி மொழியில் தொகுத்த ரியாளுஸ் ஸாலிஹீன்எனும் நபிமொழித் தொகுப்பைத் தமிழில் பலர் மொழி பெயர்த்துள்ளனர்.

ஸிஹாஹ் சித்தா

1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரஹ்மத் அறக்கட்டளை பிரபல நபிமொழித் தொகுப்புகளான புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ ஆகிய ஆறு ஆதாரபூர்வ ஏடுகளை (ஸிஹாஹ் சித்தா) தமிழில் கொண்டு வரும் அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரு தொகுப்புகளும் முழுமையாக வெளிவந்துள்ளன.


ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் 7 பாகங்களிலும், ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் 4 பாகங்களிலும் அரபி மூலம், தமிழாக்கம், அடிக் குறிப்பு விளக்கங்களுடன் ஒவ்வொரு பாகமும் சுமார் ஆயிரம் பக்கங்களைக் கொண்டு வெளி வந்துள்ளன. பல பதிப்புகளில் வெளிவந்துகொண்டுள்ளன.
எஞ்சிய நான்கு நபிமொழித் தொகுப்புகளின் மொழிபெயர்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக ஏழு ஆலிம்களைக் கொண்ட ஒரு குழு முழுநேரப் பணியைத் தனியான அலுவலகத்தில் மேற்கொண்டுள்ளது.

மார்க்கச் சட்டவியல் (ஃபிக்ஹ்)

ஃபிக்ஹ் எனப்படும் மார்க்கச் சட்டவியல் நூல்கள் அரபியிலும் பிற மொழிகளிலும் நிறைய உள்ளன. தமிழில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே சட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

1968ஆம்ஆண்டில் உத்தமபாளையம் மௌலானா, S.S. அப்துல் காதிர் பாகவி அவர்கள் கன்ஸுத் தகாயிக்எனும் அரபி நூலை அதே பெயரில் மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டார்கள். அத்துடன் தஅலீமுல் இஸ்லாம், தொழுகை விளக்கம், ஹாஜிகளின் தோழன், ரமளான் நோன்பு ஆகிய ஃபிக்ஹ் விளக்க நூல்களையும் மௌலானா எழுதியுள்ளார்கள்.

தேவதானப்பட்டி மௌலானா அப்துல்கரீம் நூரீ அவர்கள் ஃபிக்ஹின் கலைக் களஞ்சியம்என்ற பெயரில் ஒரு நூல் எழுதினார்கள். இதை மதுரை குர்ஆனிய்யா புக் டிப்போ வெளியிட்டது.

ஷாஃபிஈ மத்ஹபைப் பொறுத்தவரை, கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை அலிம் சாஹிப் அவர்கள் அரபுத் தமிழில் எழுதிய மஃகானீஎனும் நூலை, அண்மையில் கீழக்கரை மௌலவி, டாக்டர் ஷுஐப் ஆலிம் சாஹிப் அவர்கள் அதே பெயரில் தமிழில் எழுதி வெளியிட்டார்கள்.

மௌலவி, ஆதம் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் ஷாஃபிஈ ஃபிக்ஹின் சட்டக் களஞ்சியம்என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். `பத்ஹுல் முஈன்போன்ற அரபி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இரு பாகங்களில் வெளிவந்துள்ளது.

வரலாறு

இஸ்லாமிய வரலாற்று நூல்கள் தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே. அந்தத் தொகுப்பு ஆதாரபூர்வ வரலாற்று நூலாக இருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும்.

எகிப்து நாட்டு அறிஞர் முஹம்மத் ரிளா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாற்றை முஹம்மதுர் ரசூலுல்லாஹ்என்ற பெயரில் அரபியில் எழுதியுள்ளார். இதை இதே பெயரில் உத்தமபாளையம் மௌலானா, S.S அப்துல்காதிர் பாகவி அவர்கள் 1962ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இரண்டு பாகங்களில் வெளிவந்தது. ஷஹீத் கர்பலா, மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர், வீரசிற்பி உள்ளிட்ட வரலாற்று நூல்களையும் மௌலானா எழுதியுள்ளார்கள்.

இந்தியரான மௌலானா ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் அரபியில் எழுதிய அர்ரஹீகுல் மக்த்தூம்எனும் நபி (ஸல்) அவர் களின் முழு வரலாற்று நூல் பிரபலமான ஒன்று. இதை ரஹீக்எனும் பெயிரல் தாருல் ஹுதாநிறுவனத்தார் 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டனர்.
இந்நூலை மௌலவி, அ. உமர் ஷரீப் காசிமீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். இது ஆறு பதிப்புகளில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் சையித் இப்ராஹீம், எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம், இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட், ஜமால் முஹம்மத், இலங்கை அப்துல் ஜப்பார் முஹம்மத் ஸனீர், எழுத்தாளர் ஹசன், கவிஞர் மு. மேத்தா, வலம்புரிஜான், கவிஞர் பாப்ரியா உள்ளிட்டோர் இஸ்லாமிய வரலாற்று நூல்களைத் தமிழில் எழுதியுள்ளனர்.

முடிவுரை

இவ்வாறு இஸ்லாமிய மூலாதார நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந் தாலும், உரிய காலத்தில் வெளிவராத குறையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இன்னும் ஏராளமான நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இன்று மொழிபெயர்ப்புக் கலை உன்னத இடத்தைப் பிடித்துள்ளது. அரபி மொழியிலிருந்து தூய்மையான தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் மிகுந்த அறிஞர்களுக்குச் சமுதாயத்தில் பெரிய பஞ்சம் உள்ளது. அரபி மொழி அறிந்தவர்களுக்குத் தூய தமிழ் தெரியவில்லை; தமிழ் அறிஞர் களுக்கு அரபி மொழி தெரியவில்லை.

இந்தக் குறையை நீக்க, மதரசாக்களில் மொழி பெயர்ப்புக்கென தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பிரிவிலிருந்து தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும். மாணவர்களுக்கு மொழிபெயர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனியும் காலத்தின் கட்டாயத்தை உணராமல் ஒதுங்கி வாழ்வது சமயத்துக்கோ சமுதாயத்துக்கோ நல்லதன்று.

தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் எந்த அளவுக்கு அதிகமாக வெளிவருகிறதோ, அந்த அளவுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையும். அல்லாஹ் அருள் புரிவானாக!