“சந்திரன் மீது சத்தியமாக...” என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 91ஆம்
அத்தியாயத்தில் இரண்டாம் வசனத்தில் குறிப்பிடுகின்றான். சந்திரனை வெறும்
பார்வைப் பொருளாகக் கருதி அலட்சியப்படுத்திவிடாதிருக்க அல்லாஹ் அதன் மீது
சத்தியமிட்டுக்கூறி அதன்பால் எமது கவனத்தைக் குவிக்கின்றான்.
பூமியின்
உபகோளே சந்திரன் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். பூமி சூரியனைச் சுற்றி
வலம் வருவதுபோன்றே சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியையும்
சுற்றி வலம் வருகின்றது. சந்திரனின் பூமியை முழமையாகச் சுற்றி முடிப்பதற்கு
27 1/3 நாட்கள்
செல்கின்றன. இதனை வைத்துத்தான் நாம் வருடங்களையும் மாதங்களையும்
கணக்கிடுகின்றோம். இது அல்லாஹ் மனிதனுக்கு ஏற்படுத்திக்கொடுத்த ஒரு
சிறப்பம்சமாகும். அல்லாஹ் கூறுகின்றான். “இன்னும்
வருடங்களின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள்
அறிந்துகொள்வதற்காக (சந்திரனாகிய) அதற்கு அவன் பல தங்குமிடங்களை
ஏற்படுத்தினான்.உண்மையைக் கொண்டே தவிர அல்லாஹ் இவற்றைப் படைக்கவில்லை.
விளங்கக்கூடியவர்களுக்கு இதிலே சான்றுகளை அவன் விவரிக்கின்றான்.”(10:05)
பௌர்னமி
இரவில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் வெண்மதியைச் சற்றுநெரம் உற்றுப்பாருங்கள்.
நீங்கள் அறியாமலேயே உங்கள் உள்ளம் சிலிர்த்து நாவு ஸ{ப்ஹானல்லாஹ்
சொல்வதை உணர்வீர்கள். அப்படியொரு அழகையும் மனதிற்கு ஒரு இதத்தையும் இறை
அத்தாட்சியையும் அல்லாஹ் நிலவில் வைத்துள்ளான். இதனால்தான் கவிதைகளிலும்
பாடல்களிலும்கூட நிலா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.
சந்திரன்
வெளிப்படுத்தும் ஒளி உண்மையிலேயே அதற்குரித்தானதல்ல. சூரியனிடமிருந்து
இரவல் பெற்றே அதனைச் சந்திரன் மீண்டும் வெளிக்காவுகின்றது, பிரதிபளிக்கின்றது. அடிப்படையில் சந்திரன் ஒரு ஒளிராப்பொருளாகும். இவ்வுண்மை 18 ஆம் நுற்றாண்டில்தான் கண்டறியப்பட்டது. ஆனால் அல்குர்ஆன் எப்போதோ இவ்வுண்மையை இவ்வாறு கூறிவிட்டது. “அவற்றில் சந்திரனை ஒளியாகவும் சூரியனை விளக்காகவும் அமைத்தான்.” (71:16),(10:05),(25:61)
இதுதொடர்பாக வரும் வசனங்களில் சூரியனின் ஒளியைக் குறிக்க ضياء (ழியாஉன்), سراج (சிராஜுன்) என்ற பதங்களும் சந்திரனைக் குறிக்க نور (நூருன்)
என்ற பதமும் அல்குர்ஆனிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொற்களுக்கான
விளக்கமாவது முறையே சுய ஒளியை உடையதென்றும் ஒளியைப் பெற்றுப் பிரகாசிக்கக்
கூடியதென்றும் அமைகின்றது. அல்குர்ஆனின் மொமியற்புதத்திற்கு இதுவும் ஒரு
சான்று.
சந்திரன் தனது நீள்வட்டப் பாதையில் புவியினருகே வரும்போது பூமியிலிருந்து சந்திரனுக்கான தூரம் 356,395கி.மி.களும் பூமியைவிட்டு அது தூரச்செல்லும்போது 406,767கி.மி தூரத்தையும் கொண்டிருக்கும். சந்திரனின் விட்டம் 3480கி.மி.களாகும். சந்திரனில் உள்ள ஒரு பொருளின் திணிவானது பூமியிலுள்ள ஒரு பொருளின் திணிவின் 1/6 பங்காகும். புரியவில்லையா? அதாவது பூமியில் 60கி.கி. திணிவுள்ள நீங்கள் சந்திரனுக்குச் சென்றால் உங்களது திணிவு 10கி.கி. ஆகவே இருக்கும். இதற்குக் காரணம் பூமியைவிடவும் சந்திரனின் தரையீர்ப்பு விசை குறைவாயிருப்பதாகும்.
ஈர்ப்பு
விசை குறையும் சந்தர்ப்பத்தில் மனிதனால் பல்வேறு சிக்கல்களை
எதிர்நோக்கவேண்டி ஏற்படுகின்றது. விண்வெளி ஆராய்ச்சிக்காகச் செல்லும்
வீரர்கள் இதனால் பல சிறமங்களை எதிர்கொள்கின்றனர். ஓரிடத்தில் சரியாக நிற்க
முடியாது, நடக்க இயலாது. உடலில் இரத்தவோட்ட வேகம் குறைவடைகின்றது, இதயத்
துடிப்பு குறைவடைவதோடு இதயம் ஒருவகை இருக்கமான நிலையையும் அடைகின்றது.
இதயம் இருக்கமாகும் இவ்வனுபவ்தை சிலபோது விமானங்களில்
பிரயாணிப்பவர்களால்கூட பெறமுடியும். விண்வெளி என்ன? விமானத்தைக் கூட எண்ணிப் பார்க்காத அந் 14ஆம் நூற்றாண்டில் திருமறை இதுபற்றிக் கூறியிருக்கும் அற்புதத்தைப் பாருங்கள்.
“அல்லாஹ்
எவருக்கு நேர்வழிகாட்ட நாடுகின்றானோ அவரது இதயத்தை இஸ்லாத்தின்பால்
விரிவாக்குகின்றான். இன்னும் எவரை வழிகேட்டிலேயே விட்டுவிட நாடுகின்றானோ
அவருடைய இதயத்தை அவர் விண்ணில் ஏறுபவரைப்போன்று நெருக்கடியானதாக
மிகக்கஷ்டமடைந்ததாக ஆக்கிவிடுகின்றான்...” (6:125)
அல்குர்ஆன் சந்திரனின் நேர்த்தியான ஓடுபாதை பற்றி பின்வருமாறு கூறுகின்றது. “இன்னும்
அவன்தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை
ஒவ்வொன்றும் தமக்குரிய மண்டலங்களில் நீந்திச்செல்கின்றன.”(21:33) பிரிதோர் இடத்தில் “சந்திரனை (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மட்டையைப் போன்று அது மீண்டும் வரும்வரையில் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.” (36:39)
சந்திரன்
அல்லாஹ்வின் திட்டப்படி தனது ஒழுங்கையிலிருந்து சற்றும் பிசகாது
நீள்வட்டப் பாதையில் தன்னையும் சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிக்கொண்டு
செல்கின்றது. பிற கோள்களின் ஓடு பாதையைவிட சந்திரனின் பாதை
வித்தியாசமானதாகும். பூமியினதும் சந்திரனதும் சுழற்சி மற்றும் சுற்றுகை
என்பன காரணமாக சந்திரன் சில நாட்கள் பூமிக்கு முன்னாலும் சில நாட்கள்
பூமிக்குப் பின்னாலும் “T” வடிவத்தை
ஒத்த பாதையில் பயணிக்கின்றது. இவ்வடிவம் காய்ந்து உலர்ந்த பேரீச்ச மட்டையை
ஒத்திருப்பதனால்தான் அல்லாஹ் இவ்வசனத்தில் பேரீச்ச மட்டை என்று
பிரயோகித்திருக்கவேண்டுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அத்தோடு
புவியில் உயிர்வாழ்க்கை சீராக இருப்பதற்கு சந்திரனின் பங்கும் மிக
முக்கியமானது. சந்திரனின் இயக்கம் காரணமாகவே சிலவேளை கடலில்
கொந்தளிப்புகளும் அலைகளின் வீச்சும் நிகழ்கின்றன. இதுவே “வற்றுப்பெறுக்கு” எனப்படுகின்றது. சில இடங்களில் இதன் காரணமாக கடலலைகள் 60
அடிகள்வரை உயர்வதும் உண்டு. தற்போதிருப்பதைவிட பூமிக்கும்
சந்திரனுக்குமிடையிலான தூரம் குறைந்தாலோ அல்லது கூடினாலோ பாரிய
அழிவுகள்தான் நேரும். இவற்றிலிருந்தும் பாதுகாப்பான முறையில் அல்லாஹ் மிகப்
பொருத்தமான இடத்தில் சந்திரனைப் பூமியிலிருந்து தூரமாக வைத்துள்ளான்.
பிற
கோள்களைவிடவும் சந்திரனை நாம் இரவு வானில் தெளிவாகக் காண
முடியுமானபோதிலும் உலகில் யாரும் இருவரை நேரடியாகக் காணாத ஒரு பக்கமும்
சந்திரனுக்கு உண்டு. அதாவது எப்போதும் சந்திரனின் ஒரே முகப்பக்கம்தான் இரவு
நேரங்களில் பூமியை நேபக்கியிருக்கின்றது. புவிச் சுழற்சி மற்றும்
சுற்றுகையினாலும் சந்திரனின் சுழற்சி மற்றும் சுற்றுகை என்பனவற்றாலும்
சந்திரனின் மறுபக்கத்தை எம்மால் நேரடியாகக் காண முடியாதுள்ளது. 1959ஆம் ஆண்டில் ரஷ்யாவின் “லூனா- III” என்ற விண்களமே முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தைப் படமெடுத்து எம்மாலும் அதனைப் பார்க்கக்கூடிய விதத்தில் செய்தது. (படம்)
அல்லாஹ் சந்திரன் உட்பட அனைத்துமே குறிப்பிட்டதொரு தவணைவரை செல்வதாகக் குறிப்பிடுகின்றான். “சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றுக்கென) குறிப்பிட்டதொரு தவணைப்படியே செல்கின்றன.”(35:13)(39:5)
சந்திரனின் தவனை எது என்பதை விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. சந்திரனானது ஒவ்வொருவருடமும் 3செ.மீ.
அளவு தூரம் பூமியைவிட்டும் தூரம் செல்வதாக நுணுக்கமான தொலைகாட்டி
உபகரணங்களின் துணையுடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்தும்
விலகிப்போகும் சந்திரன் ஒருகாலத்தில் சூரியனின் ஈர்ப்புவிசையினுள்
அகப்பட்டு உள்ளே புதைந்துவிடும். இதனையே சந்திரனின் இறுதித் தவணையென
அல்குர்ஆன் குறிக்கின்றது. “(அந்நாளில்) சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும்.” (75:9)
ஹிஜ்ரத்திற்கு 5
வருடங்களுக்கு முன்பு நபியவர்களால் அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை
நிரூபித்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது. ஒரு முறை மக்கா
குறைஷியர்கள் நபியவர்களிடம் அவர் நபிதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்
ஏதும் அத்தாட்சிகளைக் காட்டும்படி கோரினார்கள். அதன்படி நபிகளார்
அல்லாஹ்வின் உதவியுடன் தமது சுண்டு விரலினால் சந்திரனை இரண்டாகப் பிளந்து
காட்டினார்கள். பின்பு “நான் இறைத்தூதர் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று
கூறினார்கள். எனினும் அக்காபிர்கள் அப்பிரம்மாண்டமான அத்தாட்சியை சூனியம்
என்று புறக்கணித்து மறுத்தும்விட்டனர். உடனே அல்லாஹ் இதுதொடர்பாக “அல்கமர்” என்ற அத்தியாயத்தின் முதல் இரு வசனங்களையும் இறக்கினான். சந்திரன் நபியவர்களால் பிளக்கப்பட்டதுகூட மறுமைக்கான ஓர் அடையாளமாகும். “மறுமை
நாள் நெருங்கிவிட்டது (என்பதைத் தெரிவிக்க) சந்திரனும் பிளந்துவிட்டது.
இதனை அவர்கள் கண்டபோதிலும் புறக்கணித்து இது சூனியமே என்றும் கூறுகின்றனர்.”(58:1,2,)
1400
ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட அல்குர்ஆனிய வசனங்கள் அறிவியலின் நவீன
கண்டுபிடிப்புகளுக்கு எவ்வாறு சான்றிதழ் வழங்குகின்றன என்று பார்த்தீர்களா? அல்குர்ஆன்
ஒரு விஞ்ஞானப் புத்தகமல்ல. அது முழு வாழ்க்கைக்குமான வழிகாட்டி. இறை
இருப்பை உருதிப்படுத்தும் விதத்தில் இது அவனது வார்த்தைகள்தாம் என்பதை
நிரூபிப்பதற்காக சில அத்தாட்சிகளையும் அல்லாஹ் அல்குர்ஆனிலே எமக்கு
விளக்குகின்றான். அதனால் தான் குர்ஆனிய வசனங்கள் “ஆயாத் signs அத்தாட்சிகள் என அழைக்கப்படுகின்றன.
“Alquran is not a Science Book. It is a signs Book.”
No comments:
Post a Comment