Saturday, August 4, 2012

சிந்தனை யுத்தத்தில் செத்துக் கொண்டிருக்கிறோம்

இறைநம்பிக்கையாளர்கள் நன்மைகள் செய்ய விரைகின்றனர், முன்னேறிச் செல்கின்றனர். (அல்குர்ஆன் 23:60-61)

கருணை மிக்க இறைவன் மனித குலத்திற்காக என்னிலடங்கா அருட்;கொடைகளை வழங்கியுள்ளான்.
பிள்ளைச் செல்வம், பொருட்செல்வம், பட்டம்-பதவி, நோயற்ற வாழ்க்கை, நகைநட்டுகள், வாகனங்கள் இப்படி ஏராளமான அருட்கொடைகளை இறைவன் வழங்கியுள்ள போதும் அவ்வருட்கொடைகளில் எல்லாம் மிகப் பெரிய அருட்கொடை, விலைமதிப்பற்ற ஒரு செல்வம் தீன். அதாவது இஸ்லாம்.
இத்தீனை நமக்கு வழங்கியுள்ளதால்தான் நாம் முஸ்லிம்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த தீனை நிலை நாட்ட ஒரு சமுதாயத்தை புனர்நிர்மாணம் செய்ய ஒரு சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல ஒவ்வொரு ஆண் மகனுக்கும் எத்தனை பங்கு உள்ளதோ அதைவிட அதிகமான பங்கு பெண்களுக்கும் உண்டு.

ஏனெனில் இந்த தீனினால் - மார்க்கத்தினால் அதிகம் பயன் அடைந்தவர்கள் பெண்கள், அதிகம் சிறப்படைந்தவர்கள் பெண்கள்.

துரதிஷ்டவசமாக, இன்றைய பெண்கள் இதை உணரத் தவறி தமக்கென வேறு பாதை, வேறு இலட்சியம், வேறு போக்கு, வேறு நோக்கு என வரையறுத்து இந்த தீனை ஆண்களுக்கு மட்டுமே என ஒதுக்கி ஒதுங்கிக் கொண்டனர்.

பெண்கள் ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கி தம் பொறுப்புக்களை உணர்ந்துக் கொள்ளாத வரையில் எந்தவொரு சமுதாய மாற்றமும் இந்த மண்ணில் நிகழப் போவதில்லை.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னுள்ள காலகட்டத்தை நினைத்துப் பாருங்கள்.

முழு உலகிலும் பெண்களின் நிலை என்னவாக இருந்தது. ஆண் மட்டும் தான் மனிதப் பிறவி, பெண் என்பவள் ஆண்களுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்ட ஒரு உயிரிணம், விலங்குகள் போலத்தான் பெண்களும் நடாத்தப்பட்டனர்.

பெண்களுக்கு ஆன்மா உண்டா? இல்லையா? என்ற ஆராய்ச்சிகளை மேற்கத்திய நாடுகள் கூட நடாத்த தவறவில்லை.

பெண் குழந்தை பிறப்பதையே அவமானச் சின்னமாக, மானக் கேடாக கருதிய சமுதாயத்தில்,''பெண் என்பவள் மனித குழத்தில் ஓர் அங்கம் '' என்ற புரட்சி கரமான செய்தியை அறிவித்த முதல் மார்க்கம் இஸ்லாம்.

வாரிசுப் பொருட்களோடு பொருளாகக் கருதி பெண்களைப் பங்கீடு செய்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் வாரிசுச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டு என பிரகடனப் படுத்திய முதல் மார்க்கம் இஸ்லாம்.

இது பெண்களை கௌரவித்த மார்க்கம், பெண்களை சிறப்பிக்க வந்த மார்க்கம், பெண்களுக்கு வாழ்வளிக்க வந்த மார்க்கம்.

இந்த உணர்வு, இந்த சிந்தனை இன்றைய இஸ்hலாமியப் பெண்களிடம் மடிந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்க் கொண்டுள்ளது.

ஆனால் அன்றைய காலப் பெண்களோ இதை உணர்ந்திருந்தனர். எனவே இஸ்லாத்தை முதன் முதலில் தழுவியது ஒரு பெண். வஹியின் ஆரம்பமே ஒரு பெண்ணின் கதீஜா (ரலி) அவர்களின் துணையோடு துவங்கிற்று. இஸ்லாத்தை முதன் முதலில் தழுவியது ஒரு பெண் என்றால் - இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர்த் தியாகம் செய்ததும் ஒரு பெண்தான். தன் உயிரை ஈந்து தீனை வாழ வைத்தார்கள் அன்னை சுமையா (ரலி) அவர்கள். இன்றைய பெண்களிடம் இந்த உணர்வு இல்லை. இதன் விளைவு சமுதாயத்தில் புற்று நோயாக புரையோடிக் கிடக்கின்றது.

பெண் குழந்தை பிறப்பது சாபக் கேடு, பெண் குழந்தையை வளர்ப்பது பொருளாதாரச் சுமை என்று எண்ணி, பெண்கள் அவமானச் சின்னமாகக் கருதப்பட்ட காலத்தில், எவன் ஒருவன் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து ஆளாக்குகிறானோ, அம்மனிதன் மறுமையில் நரகம் செல்லாதவாறு இரண்டு பெண்களும் திரையாக நிற்பார்கள் என பெண்ணை மகள் என்ற நிலையில் கௌரவப்படுத்தியது இஸ்லாம்.

நீங்கள் அவர்களுக்கு ஆடை, அவர்கள் உங்களுக்கு ஆடை என ஆண் பெண் உறவை, பரஸ்பர பாசத்தை, காதலை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கமளித்தது அல்குர்ஆன்.

மனிதர்களே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியரிடத்தில் சிறந்தவர் என்று மனைவி என்ற நிலையில் கௌரவப்படுத்தியது இஸ்லாம்.

''ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவுகின்றார். நான் முதலில் யாருக்கு கடமைப்பட்டுள்ளேன்? உன் தாய்க்கு, இரண்டாவதாக? உன் தாய்க்கு, மூன்றாவதாக? உன் தாய்க்கு, நான்காவதாக? உன் தந்தைக்கு. ஆம்: முதல் மூன்று நிலைகள் தாய்க்கு. நான்காவது நிலைதான் தந்தைக்கு. ஒரு குழந்தையை தாய் கருவில் சுமப்பது முதல் நிலை, பிரசவிப்பது இரண்டாவது நிலை, பாலூட்டுவது மூன்றாவது நிலை, அக்குழந்தையை வளர்க்கும் நான்காவது நிலையில் தான் தந்தை வருகின்றார். இதை உணர்ந்து முதல் மூன்று நிலைகளைத் தாய்க்கு கொடுத்து தாய் என்ற நிலையில் பெண்ணை கௌரவப் படுத்தியுள்ளது இஸ்லாம்.''

இவ்வாறு பெண்களை மகளாக, தாயாக, மனைவியாக, சகோதரியாக என எல்லா நிலையிலும் கௌரவப் படுத்தியுள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இந்த தீன் மட்டுமே.

இந்த மார்க்க அறிவு இல்லாமல் சுதந்திரம் வேண்டும் என நாகரிகத்தின் பின்னால் ஓடுகின்றோம். கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணெய் தேடி அலைகிறோம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவாய்ப்பு என்ற பெயரில் பெண்ணினத்தை ஏமாற்றி வருகின்றது இந்த நவநாகரிகம்.

ஆண்களின் சிற்றின்ப ஆர்வத்தை தூண்டும் போதைப் பொருளாக மட்டுமே பெண்கபை; பயன்படுத்துகின்றது இன்றைய நாகரிகம்.

டயர் விளம்பரமா? அரைகுறை ஆடையில் பெண்கள்.

பற்பசை விளம்பரமா பெண்கள். மீண்டும் அந்த அறியாமைக் கால மூட பழக்க வழக்கங்களை, அந்தப் பழைய ரசத்தையே புதிய போத்தலில் புகட்டுகின்றது இன்றைய நாகரிகம்.

பெண்களை மாணிக்கங்களாகப் பாதுகாக்கும் இஸ்லாத்தை விட்டு விட்டு, பெண்மையைக் கருங்கல், செங்கல் ஆக வீதி தோறும் இறைக்கும் நாகரிகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாலு பெண்கள் சேர்;ந்தால் அவர்களின் பேச்சு எதை நோக்கி உள்ளது? புடவை? பூ? சில சமயல் குறிப்புகள்? தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் மெகா தொடர்கள்? நகை? இவைதான் வாழ்க்கையா? என்றாவது மார்க்க சிந்தனையைப் பேசி இருக்கிறார்களா? மறுமையைப் பற்றி நினைக்கின்றார்களா?

என்மகன் நோயற்ற வாழ்வு வாழவேண்டும், அதிகம் அதிகம் சம்பாதிக்க வேண்டும். என் மகள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்று ஏங்கும், கலங்கும் தாய்மார்கள் நிறைய

எந்த தாயாவது என் மகளை, மகனை மறுமையில் நரக நெருப்பு தீண்டாமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டதுண்டா?

அற்பமான இவ்வுலக வாழ்க்கைக்காக கண்ணீர் சிந்தும் கண்கள் நிலையான மறுமை வாழ்வுக்காக கலங்கியதுண்டா என்றால் இல்லை.

இரண்டு வகையான யுத்தங்கள் உண்டு, ஒன்று இராணுவ யுத்தம். இது நமக்குத் தெரியும். மற்றொன்று சிந்தனை யுத்தம், கத்தியின்றி இரத்தமின்றி நடக்கும் இந்த சிந்தனை யுத்தத்தில் நாம் நாள்தோறும் மடிந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி, இணையதளம், செய்தித்தாள்கள் வாயிலாக நம்மூளை தினம் தோறும் சலவைச் செய்யப்பட்டு அல்லாஹ்வை விட்டு விலகிக் கொண்டிருக்கின்றோம்.

சகோதரிகளே! விழித்தெழுங்கள்! அல்லாஹ்வின் பக்கம், அல்லாஹ்வின் பாதையில் விரைந்து வாருங்கள். அல்லாஹ்வின் பாதையில் முதல் கட்டம் தவ்பா செய்வது. தவ்பா என்றால் யா அல்லாஹ்! எங்களை மன்னித்து விடு என்று வாயால் மொழிவது அல்ல, நம் செயலில் காட்ட வேண்டும்.

ஷைத்தானியப் பாதையை விட்டு விலகி, அல்லாஹவின் பாதையில் திரும்புவதுதான் தவ்பா.

இந்த முதல் கட்டம் நிறைவேறினால், அடுத்து இரண்;டாவது கட்டம் பேணுதலாக இருப்பது இறைவனின் பாதையில் தவ்பா செய்து மீண்டு விட்டோம். இனி எந்தச் சூழ்நிலையிலும் இப்பாதையை விட்டு விலகக் கூடாது என்று பேணுதலாக இருக்க வேண்டும்.

மூன்றாவது கட்டம்: பற்றற்ற நிலை. ஹலாலான விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுப்பது. நாம் வாழ்வின் இலாப நஷ்டங்களை இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்வது. இறைவனுக்காக நாம் தியாகம் செய்யும் போதுதான், நம் வாழ்க்கை பரக்கத் (அருள்வளம்) நிறைந்நததாக அமையும்.

நான்காவது கட்டத்தில் அல்லாஹ்வின் மீது பேரன்பும், பாசமும் செலுத்துவது. இதை முழுமையாக நிறைவேற்றினால் ஐந்தாவது கட்டமான இறைவனின் திருப்தி நமக்கு கிடைக்கும்.

இந்த ஆன்மீகப் பாதையில் இறைவனின் திருப்தியை நம் இலட்சியமாகக் கொண்டு நம் வாழ்க்கையை, சமுதாயத்தை மாற்றி அமைப்போம். இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment