Wednesday, April 4, 2012

அமீர் தீவிரவாதியா....?

அமீர் தனது வாய் பேசமுடியா 
தாயாருடன்
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக் கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

1996 டிசமபர் மாதத்திலிருந்து 1997 அஃக்டோபர் மாதம் வரை டெல்லி, ரோக்தாக்,சோனாபெட்,காஸியாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இருபதுக்கும் மேற்பட்ட சிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு இவரே மூல காரணம் என்று போலீஸ் அவர் மீது குற்றம் சாட்டியது.இதில் பேருந்துகளில் நிகழ்ந்த ஐந்து குண்டுவெடிப்புகளும்,டெல்லி சதார் பகுதியில் ஒரே நாளில் நிகழ்ந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும்,பிராண்டியர் மெயிலின் (Frontier Mail) மூன்று கோச்சுகளில் நிகழ்ந்த (காஸியாபாத்தில் வைத்து) குண்டுவெடிப்புச் சமபவங்களும் அடங்கும்.இந்த இருபது சமபவங்களிலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். அமீரைக் கைது செய்த போலீசார் அவரைத் திகார் சிறையில் அடைத்தனர்.


இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் சகீல் என்ற இன்னொருவரும் கைது செய்யப்பட்டார்.விசராணை தொடங்கும் முன்னரே சகீல் பத்து வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிற வழக்குகளுக்காகச் சிறையில் இருந்த அவர் 20009 ஆம் ஆண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.அத்துடன் அந்த நபரின் கதை முடிந்து வைக்கப்பட்டது.


அமீர் 14 ஆண்டுகள் சிரை வைக்கப்பட்டு.2012 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்டிருந்த இருபது வழக்குகளில் 18 வழக்குகளின் அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லையென்றும், எந்த விதமான சாட்சிகளோ, ஆவணங்களோ இல்லாமல் இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி ‘விசராணை நீதி மன்றம்’ அமீரை விடுதலை செய்தது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூன்று வழக்குகளில் மட்டும்(அது ஏன் மூன்று வழக்குகளில் மட்டும்?) போலீஸார்.டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதி மன்றம் “குற்றத்தை நீரூபிப்பது இருக்கட்டும். எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் போலீஸார் அமீர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று தீர்ப்பளித்தது.


அமீரின் வழக்கறிஞரான திரு.என்.டி. பஞ்சோலியா இது பற்றிக் கூறும் போது “எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்,18 வயதான இளைஞர் இருபது இடங்களில் குண்டுகள் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது வியப்பாக இருக்கிறது. போலீஸ்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது” என்கிறார்.


தனது 18 வது வயதில் கைது செய்யப்பட்ட அமீர் 14 ஆண்டுகள் டெல்லி திகார் சிறையில் சிறை வாசம் அனுபவித்து விட்டு 33 வது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனது வாழ்க்கையின் வசந்தகாலம் முழுவதையும் அவர் சிறையில் கழித்துள்ளார். தனது மகனைச் சிறையிலிருந்து ஜாமீனில் கூட வெளியே கொண்டு வரமுடியாமல்,அமீரின் தகப்பனார் மனமுடைந்து இறந்து போனார் அவரது தாயார் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்து விட்டார்.அவரின் குடும்பமே நிர்மூலமாகிப் போயுள்ளது.


போலீஸ் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அமீரைத் தொடர்புபடுத்தி பொய்யான வழக்குகள் தொடுத்த கதை இன்னும் வேதனையானது. பாகிஸ்தானில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள தனது சகோதரியைப் பார்ப்பதற்காக அமீர் அந்நாட்டுக்கு ஒரு முறை சென்று வந்துள்ளார்.12.2.1997 இல் பாகிஸ்தான் சென்ற அவர் 13.2.1998 அன்று அங்கிருந்து நாடு திரும்பினார்.


பாகிஸ்தான் செல்லுமுன்,விசா பெறுவதற்காக, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் ஹை கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சென்றிருந்தபோது, வெளியில் நின்று கொண்டிருந்த இந்திய உளவுப் பிரிவைச் சார்ந்த இரண்டு பேர்,அவரைச் சந்தித்து பாகிஸ்தானிலிருந்து சில ஆவனங்களைக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். உளவுத்துறையினர் கொடுப்பதாக வாக்களித்த சிறு தொகைக்கு ஆசைப்பட்டு, அமீரும் அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் வாக்களித்தபடி அவரால் ஆவணங்கள் கொண்டுவர இயலவில்லை. இத்தகவல்களை உளவுத்துறையினரிடமிருந்து தெரிந்துக் கொண்ட டெல்லி போலீஸார் அவரை இந்தக் குண்டுவெடிப்புச் சமபவங்களுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது சகோதரியைப் பார்ப்பதற்காகப் பாகிஸ்தான் சென்ற அவரை,அங்கு சென்று பயிற்சி பெற்று வந்தாகக் கதை கட்டினர்.


18 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அமீரின் மீது இன்னும் இரண்டு வழக்குகளே நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீருபணம் ஆனால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனையே கிடைக்கும். ஆனால், அவர் ஏற்கனவே 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்து விட்டது.


தன்னை சந்திக்க வருபவர்களிடம் அமீர் கேட்கும் கேள்வி இதுதான் : “நான் செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டேன். ஹாஸிம்புராவில் பல முஸ்லிம்களைக் கொன்று குவித்த போலீஸ்காரர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடிக்கு ஏன் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை?” அமீர் மட்டுமல்ல, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்வியும் இதுதான்.


நன்றி : 7.2.2012 ‘ஹிந்து ஆங்கில நாளிதழ்

நன்றி : சேயன் இப்ராஹிம்
நன்றி : சமரசம்

No comments:

Post a Comment