Sunday, April 8, 2012

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்


தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் கர்நாடகாவில் 10934 பேரும் ஆந்திராவில் 9433 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

* முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் மட்டும் நாள்தோறும் 32 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வண்ணமயமான வாழ்விலிருந்து விடுபட்டு வெள்ளைத் துணியில் அடைக்கலம் தேடும் இவர்கள், தங்களின் வாழ்வை விட்டு ஒதுங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? ஒரு துண்டுக் கயிற்றிலோ,ஒரு துளி விஷத்திலோ இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும்போது அவற்றுக்கான காரணத்தை நாம் அறியாமால் போவது ஏன்? அந்த மர்ம முடிச்சுதான் என்னவோ? தற்கொலைகள் நடைபெறுகின்றபோது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்டும் வேகம், பிறகு படிப்படியாகக் குறைந்து அந்த வழக்குகள் தூசு படிந்த கோப்புகளில் உறங்கிக் கிடப்பது ஏன்?

கடந்த 2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் 1.8 % 14 வயதுக்கும் கீழே உள்ள சிறுமியர்கள் ஆவர்.(இது சிறுவர்களின் விகிதத்தை விட அதிகமாகும்) 15 முதல் 30 வயது வரையுள்ளவர்களின் விழுக்காடு 25.7% ஆகும்.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் குடும்பப் பிண்ணனி, சமூக சூழல் ஃஆகியவற்றை மையப் படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.

குடும்பம்

* தாய் தந்தையரின் அவசரகோல வாழ்க்கை 
* குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் இல்லாமை
* தவறு செயுதால் தன்னைப் பாதுகாக்க குடும்பத்தில் எவருமே இல்லை என்ற எண்ணம்
* எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்ற தாய்,தந்தை இருவரில் ஒருவரை மிக எளிதாக தனது ‘கைக்குள்’ போட்டுக் கொள்வதில் கிடைக்கின்ற வெற்றி.

நாகரிகச் சூழல்
* செல்பேசி கேமரா, இணையம் ஆகியவற்றின் தவறான பயன்பாடு
* போட்டி மனப்பாங்கு
* ஆடம்பர வாழ்வின் மீதான மோகம்
* தவறான ஆண்-பெண் உறவு
*பொருளாதார நெருக்கடிகள்

உளவியல் சார்ந்தவை
* உணர்ச்சிவசப்பட்டு நடுநிலை தவறுதல்
* பருவம் அடைகின்றபோது ஏற்படுகின்ற உளவியல் பிரச்சனைகள்
* தனிமை எண்ணம்
* அன்பு,காதல் ஆகியவை குறித்த தவறான புரிந்துணர்வு
* எதையும் சாமளிக்கின்ற திறமை இன்மை
* துக்கம், கவலை
உடல் சார்ந்தவை
* மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹார்மோன்களின் காரணமாக உண்டாகும் வேதனை
* ஆரோக்கியமின்மை
*தீரா நோய்கள்
* அழகின்மை
அரசியல்-கல்வி சார்ந்தவை
* மாஃபியா ரவுடி கும்பலின் துணையுடன் நடைபெறுகின்ற விபச்சாரம்.
* விபச்சாரக் கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கு
* ஊடகங்கள் தருகின்ற அதிகப் படியான முக்கியத்துவம்
* துன்புறுத்தப்படுதல்
* கல்வித் திட்டங்களில் ஒழுக்கப் பாடங்களை இணைக்காதது
* ஆரோக்கியமற்ற பள்ளிக்கூட சுற்றுப்புறம்
மொபைல் கேமராவில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி, வன் புணர்ச்சி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற முறையற்ற செயலகளில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்கள் அல்லர். இதன் பின்னணியில் பல விபச்சாரக் கும்பல்கள் உள்ளன.
மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இந்தியாவில் 43000 கோடி ரூபாய் அளவுக்குப் பாலியல் தொழில் நடைபெறுகிறது. சுற்றுலா வளர்ச்சி எனும் பெயரில் அரங்கேற்றப்படுகின்ற செயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மஸாஜ் செண்டர்கள் என்னும் போர்வையிலும் அழகு நிலையங்களின் பின்னணியிலும் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களைப் பாதுகாப்பது யார் தெரியுமா? அரசியல்வாதிகள்தாம். இவர்களின் செயல்களினால் சீரழிகின்ற பெண்கள் இறுதியாகத் தற்கொலை செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனை தடுக்க பள்ளி நிர்வாகம், பொற்றோர், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.விழிப்பு உணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். பெண்களின் கைப்பேசிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களையும் படங்களையும் அனுப்புகிற ஈனர்களைக் கண்டறிந்து கைது செய்யும் வசதியை செல்பேசி நிறுவனங்களே உருவாக்கித் தர வேண்டும். அத்தகையர்களின் சிம் கார்டுகளைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருமுறை இவர்களின் வலையில் ஒரு பெண் சிக்கிவிட்டால் அதன் பாதிப்புகளை மனம் விட்டுப் பரிமாறிக் கொள்ள குடும்பத்திலோ பள்ளிக்கூடத்திலோ அவர்களுக்கு யாரும் இல்லை. பள்ளியிலேயே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஓர் ஆலோசனை மையத்தை நிறுவலாம்.
ஒழுக்கக் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும். பாடத் திட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மணவர்களின் செல்பேசி,கணினி, புத்தகங்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றோம் எனும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாதவாறு இது அமைய வேண்டும் என் தற்கொலைத் தடுப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தற்கொலைக்கான எண்ணம் இறுக்கமான வாழ்க்கை முறையிலிருந்துதான் தொடங்குகின்றது.குறிப்பாக சமூகத்தில் பெருகி வருகின்ற ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எல்லாமே தொடங்குகின்றது. உலகம் அடைந்து வருகின்ற முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்காமல் விலகி இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அன்று. கைவிட்டுப் போன நன்மைகளைப் பற்றிய, அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.

நன்றி: சமரசம்
படம் கூகுள்

No comments:

Post a Comment