பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்?
ஓர் ஆய்வு !
ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள்
பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவி
ட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான்.விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை
சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக்
கேள்விப் பட்டிருப்போம்.
அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும்
அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.
அப்படி மாறிய மாணவர்கள் சிலர்
துப்பாக்கியுடன் செய்த வன்முறைகளை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இன்றைய கல்வி, மொழி, வாழ்க்கை,
நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களிடன் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வை குன்றச் செய்வதையும்
பார்க்கிறோம். ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும்
முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல், எல்லாம் சேர்ந்து
விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய
தனிநபர்களாக மாற்றுகின்றது.
இந்தக் கட்டுரை நோயை மட்டும் ஆராயவில்லை.
இந்த நோய்க்கு என்ன மருந்து அத்தியாவசியம் என்பதையும்
எடுத்துச் சொல்கிறது. விடலைப் பருவத்தினரை எந்த அளவு சமூகமனிதர்களாக மாற்றுகிறோமோ அந்த அளவு அவர்களது
வன்முறையை தணித்து
நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும்.
புதிய கலாச்சாரத்தில் வந்த இக்கட்டுரையை காலப்பொருத்தம்
கருதி இங்கே பதிவு செய்கிறோம்.
சம்பவம் 1. தெற்கு தில்லி,
அரியானா எல்லையில் இருக்கும் குர்கான்
நகரம். அங்கு யூரோ
சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக்
தியாகியுடன் தகராறு
வருகிறது. அவினாஷின் அப்பா ரியல்
எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி
வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ்,
வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.
சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில்
படிக்கும் அந்த மாணவனது வீடு,
பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால்
சுட்டுப் பழகுவது,
இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா
பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில்
படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப்
பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு
மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில்
சேர்க்கப்படுகிறார்கள்.
சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2
படிக்கும் மாணவன். உடன் படிக்கும்
விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்
கொல்கிறான். “தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் ” என அதர் சிங் வாக்குமூலம்
அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும்
திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச்
சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு
பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற
வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம்
லோகநாயகி நொந்து
கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக
எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க
நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில்
ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட
ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப்
படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு
நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில்
இல்லினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப்
பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா
என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும்
அமெரிக்கமயமாகி வரும் போது,
வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே
துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.
இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம்
செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட
சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை.
விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.
2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில்
இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன்
அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு
கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய
அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று
திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக்
கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க
முயன்றபோது பிடிபட்டார்கள்.
இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில்
வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை
என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம். வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று
திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத்
தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப்
பையனும் இருக்கிறான் என்பதைப் பெற்றோர்கள்
புரிந்து கொள்வதில்லை.
ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை
விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு
ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக
மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார்,
இருசக்கர வாகனங்கள்,
செல்பேசிகள், பீட்ஸா,
பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் …
இலட்சக்கணக்கான விவசாயிகளைத்
தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு ‘மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்’ பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட
வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும்
இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா
வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து
செய்துவிட்டு, கேளிக்கை,
நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு
ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக
மாற்றியிருக்கிறது?
புதிய கலாச்சாரம், மார்ச்’08